சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.109   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/09 Thiruporsunnam Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/09 Thiruporsunnam.mp3
Audio: https://sivaya.org/audio/8.109. திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்.mp3
8.117   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/17 Annaipatthu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.109   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ  
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்!
சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்!
சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்!
அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[1]
பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும்,
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்;
கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன்,
தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

[2]
சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி,
இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்து, கொடி எடுமின்;
அந்தரர் கோன், அயன் தன் பெருமான், ஆழியான் நாதன், நல் வேலன் தாதை,
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[3]
காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு அணிமின்கள், கறை உரலை;
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தி,
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம் பொன் கோயில் பாடி,
பாச வினையைப் பறித்து நின்று, பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[4]
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்;
செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி,
முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[5]
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர், உலகம் எலாம் உரல் போதாது என்றே;
கலக்க அடியவர் வந்து நின்றார், காண உலகங்கள் போதாது என்றே;
நலக்க, அடியோமை ஆண்டுகொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி, மகிழ்ந்து, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[6]
சூடகம், தோள் வளை, ஆர்ப்ப ஆர்ப்ப, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப,
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப,
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்கினன், எங்கள் பரா பரனுக்கு,
ஆடக மா மலை அன்ன கோவுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[7]
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்!' என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[8]
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[9]
முத்து அணி கொங்கைகள் ஆட ஆட, மொய் குழல் வண்டு இனம் ஆட ஆட,
சித்தம் சிவனொடும் ஆட ஆட, செம் கயல் கண் பனி ஆட ஆட,
பித்து எம்பிரானொடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட,
அத்தன் கருணையொடு ஆட ஆட, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[10]
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப,
பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித்
தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி,
ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[11]
மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,
ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,
பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[12]
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[13]
சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட,
செம் கனி வாய் இதழும் துடிப்ப, சேயிழையீர்! சிவலோகம் பாடி,
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடை முடியான் கழற்கே,
பொங்கிய காதலின் கொங்கை பொங்க, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[14]
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்
தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி,
பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[15]
ஆவகை, நாமும் வந்து, அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி, விண்மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம் மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச்
சே வலன் ஏந்திய வெல் கொடியான், சிவபெருமான், புரம் செற்ற கொற்றச்
சேவகன், நாமங்கள் பாடிப் பாடி, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

[16]
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல்
வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும்
ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று,
போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[17]
அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி,
கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி,
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

[18]
வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி,
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி, சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி,
கட்டிய மாசுணக் கச்சை பாடி, கங்கணம் பாடி, கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி, ஈசற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

[19]
வேதமும், வேள்வியும், ஆயினார்க்கு; மெய்ம்மையும், பொய்ம்மையும், ஆயினார்க்கு;
சோதியும் ஆய், இருள் ஆயினார்க்கு; துன்பமும் ஆய், இன்பம் ஆயினார்க்கு;
பாதியும் ஆய், முற்றும் ஆயினார்க்கு; பந்தமும் ஆய், வீடும் ஆயினாருக்கு;
ஆதியும், அந்தமும், ஆயினாருக்கு; ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.117   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்  
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலிவிருத்தம்
வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர்,
நாதப் பறையினர்; அன்னே! என்னும்,
நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும்,
நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.

[1]
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.

[2]
நித்த மணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும்.
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.

[3]
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.

[4]
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும்.
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.

[5]
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும்.
மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்;
என்ன அதிசயம்! அன்னே! என்னும்.

[6]
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

[7]
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

[8]
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால்; அன்னே! என்னும்.
ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்
நையும்; இது என்னே! அன்னே! என்னும்.

[9]
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list